அரூர்: அரூரில் நில அதிர்வு பீதி ஏற்பட்டதால், வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் நகருக்குட்பட்ட திரு.வி.க.நகர், குறிஞ்சி நகர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில், வீடுகளுக்குள் இருந்த பொருட்கள் திடீரென உருண்டோடியதாக தகவல் பரவியது. இதனால் நிலஅதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என பீதியடைந்த மக்கள், அலறியடித்தபடி நள்ளிரவில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதே போல், அரூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், நில அதிர்வு ஏற்பட்டதாக, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரூர் நகரப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென பாத்திரங்கள் உருண்டோடியது. அடுக்கி வைத்திருந்த பொருட்கள் எல்லாம் கவிழ்ந்து விழுந்தது. ஏதோ ஒரு அதிர்வு ஏற்பட்டதை போல் உணர்ந்ததால், உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வந்தோம். இதேபோல் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நண்பர்களும், உறவினர்களும் பொருட்கள் உருண்டோடியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்தனர். ஆனால், இது நிலஅதிர்வா? என்பது எங்களுக்கு தெரியவில்லை,’ என்றனர்.