புதுடெல்லி: பயணிகள் வாகன விற்பனை 23.69 சதவீதம் சரிந்துள்ளது. தொடர்ந்து 11வது மாதமாக விற்பனை குறைந்துள்ளது, வாகன உற்பத்தியாளர்கள், டீலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இன்ஜின் தரநிலை உயர்வு போன்ற காரணங்களால் வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தொடர்ந்து 11வது மாதமாக கடந்த மாதமும் வாகன விற்பனை குறைந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (சியாம்) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த செப்டம்பரில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 23.69 சதவீதம் சரிந்து 2,23,317 ஆக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இது 2,92,660 ஆக இருந்தது. இதுபோல் கார் விற்பனை 33.4 சதவீதம் குறைந்து 1,31,281 ஆக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு இது 1,97,124 ஆக இருந்தது.
மோட்டார் சைக்கிள் விற்பனை 23.29 சதவீதம் சரிந்து 10,43,624 ஆகவும், ஒட்டுமொத்த அளவில் டூவீலர்கள் விற்பனை 22.09 சதவீதம் குறைந்து 16,56,774 ஆகவும், வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 39.06 சதவீதம் சரிந்து 58,419 ஆகவும், அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த வாகன விற்பனை 22.41 சதவீதம் சரிந்து 20,04,932 ஆகவும் உள்ளது என சியாம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சரிவால் பல லட்சம் பேர் வேலை பறிபோய்விட்டது. அதோடு, உற்பத்தியை குறைக்க உற்பத்தி நிறுவனங்கள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், பண்டிகை சீசனில் தள்ளுபடி அறிவித்தும் வாகன விற்பனை சரிந்துள்ளது விற்பனையாளர்கள், டீலர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.