சென்னை: சீன நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மக்கள் தங்களை தனி நாடாக அறிவிக்க கோரி பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சீன அதிபர் செல்லும் இடங்களில் அவர்கள் திரண்டு நின்று அவ்வப்போது கோஷங்களை எழுப்பி கவனத்தை கவர்வது வழக்கம். தமிழகத்திற்கு வரும் சீன அதிபருக்கு இதுபோன்று நடந்து விடக்கூடாது என்பதற்காக திபெத் மாணவர்கள், பேராசிரியர்கள், மாணவர் சங்க தலைவர், போராட்டக்குழு செயலாளர் உள்ளிட்டோரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து வருகின்றனர். புதுச்சேரி அருகே கோட்டக்குப்பத்தில் ஒரு போராட்டக்காரரை கைது செய்த போலீசார் சென்னை சேலையூர் அருகில் 8 மாணவர்களையும் கைது செய்தனர். இந்நிலையில் சீன அதிபர் பயணம் செய்யும் கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கத்தில் தங்கியிருந்த திபெத் பேராசிரியர் ஒருவரையும் நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். அவர் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.