தமிழகம் வருகையின்போது சீன அதிபர் பயன்படுத்தும் கார்கள் தனி விமானத்தில் சென்னை வந்தது

சென்னை: சீன அதிபர் தமிழகம் வருகையின்போது பயன்படுத்தும் கார்கள் தனி விமானத்தில் வந்தது. மாமல்லபுரம் பயணத்திற்காக சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், அவரது குழுவும் பயன்படுத்த உள்ள குண்டு துளைக்க முடியாத 4 சொகுசு கார்கள், சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டன. வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபர் ஸீ ஜின்பிங் 2.05 மணிக்கு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்குச் செல்கிறார். அங்கிருந்து 4 மணி அளவில் மாமல்லபுரத்திற்கு அவர் புறப்படுகிறார்.

குண்டு துளைக்க முடியாத சொகுசு காரில் அவர் பயணிக்க உள்ளார். அவருடன் வரும் குழுவும், குண்டு துளைக்க முடியாத காரில் பயணிக்க உள்ளது. இதற்காக ஹாங்கி எல் 5 என்ற 4 சொகுசு கார்கள், தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டன.

ஏர் சைனா B747 என்ற சரக்கு விமானத்தில் ஏற்றிக் கொண்டு வரப்பட்ட அந்த நான்கு கார்களும் செவ்வாய் கிழமை இரவு 7 மணி அளவில் விமான நிலையத்தில் இறக்கப்பட்டன. உடன் வந்த சீன அதிபரின் பாதுகாப்புக் குழுவினர், இந்திய அதிகாரிகளையும், விமான நிலைய அதிகாரிகளையும் சந்தித்தனர். அப்போது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக கேட்டறிந்தனர். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை உள்ள பாதுகாப்பு தொடர்பாக அந்தக் குழு, பல முறை காரில் சென்று வர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories: