தாம்பரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மித்ரா (25). இவர், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் தனியாக அறை எடுத்து தங்கி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வந்தார்.இந்நிலையில் வேலை தொடர்பாக வெளிநாடு சென்ற அவர் நேற்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். நேற்று காலை பெருங்களத்தூரில் உள்ள அவரது அறைக்கு வந்துவிட்டு, வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டு சென்றார். அப்போது பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது அவ்வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.