நெல்லை அருகே பயங்கரம் தண்ணீரில் மூழ்கடித்து இரு குழந்தைகள் கொலை : மனநிலை பாதிக்கப்பட்ட தாய் வெறிச்செயல்

களக்காடு: களக்காட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட தாய், டிரம் தண்ணீரில் இரு குழந்தைகளை மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு தோப்பு தெருவைச் சேர்ந்தவர் இசக்கி மகன் நம்பிராஜன் (30), இவரது மனைவி சங்கரி (26). 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று வயதில் முத்து வர்ஷினி என்ற மகளும் மூன்று மாதத்தில் முத்து ஆசித் என்ற மகனும் இருந்தனர். நம்பிராஜன் சென்னையில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சங்கரி தனது இரு குழந்தைகளுடன் களக்காட்டில் மாமனார் இசக்கி வீட்டில் வசித்து வருகிறார். சங்கரிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மகன் பிறந்த போது மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே நேற்று பகல் இசக்கி வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சங்கரி திடீரென தனது மூத்தமகள் முத்து வர்ஷினியையும், அடுத்து 3 மாத குழந்தை முத்து ஆசித்தையும் தண்ணீர் நிரம்பிய டிரம்மில் மூழ்கடித்து  கொலை செய்தார். குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர், பசிக்காகவோ, சேட்டை செய்து தாயிடம் அடிவாங்கியோ குழந்தை அழுதிருக்கும் என நினைத்தனர். திடீரென அமைதியானதால் சந்தேகமடைந்த அவர்கள் சங்கரி வீட்டிற்கு சென்று பார்த்தபோது டிரம்மில் மூழ்கி குழந்தைகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சங்கரியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: