பெரியாறு வைகை பாசனத்திற்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: பெரியாறு வைகை பாசனத்திற்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் உள்ள பெரியாறு பங்கீட்டு நீர் மற்றும் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள கண்மாய்களின் நீர் இருப்பும் சேர்த்து 6000 மி.க.அடி தண்ணீர் இருந்தால் பெரியாறு பாசனப் பகுதியில், ஒருபோக பாசன  நிலங்களுக்கும்  திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் சேர்த்து பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்.

இதன்படி, பெரியாறு வைகை பாசனத்திற்கு தண்ணீர் வழங்குமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று, பெரியாறு பாசனப் பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான  கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு வருகிற 9ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,05,002  ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: