சென்னை: நாடு முழுவதுமுள்ள 28 சைனிக் பள்ளிகளை பாதுகாப்பு அமைச்சகமே ஏற்று நடத்த உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்துக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 28 சைனிக் பள்ளிகளை பாதுகாப்பு அமைச்சகம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு மாநில ஓய்வூதிய சட்டத்தின் அடிப்படையில் மாநில அரசே ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கும் வகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசுக்கு கடந்த 2006ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் அனுப்பியது. இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட உத்தரவிடக்கோரி கொடைக்கானலை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.