சென்னை: நோயாளியை மருத்துவமனை அழைத்து சென்றபோது சாலையோரம் நின்றிருந்த தனியார் பஸ் மீது 108 ஆம்புலன்ஸ் மோதியதில் டிரைவர், மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மருத்துவ உதவியாளர், பெண் படுகாயமடைந்தனர். செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கன்னியம்மாள் (70). இவர்களது மகள் சரஸ்வதி. இவருக்கு திருமணமாகி, காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் கணவர் வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் கன்னியம்மாள், மகள் சரஸ்வதி வீட்டுக்கு சென்றார். நேற்று கன்னியம்மாளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை, டாக்டர் பரிசோதனை செய்தபோது, உடல்நிலை மோசமாக இருந்ததால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கும்படி கூறினர். இதையடுத்து சரஸ்வதி, 108 ஆம்புலன்ஸ் மூலம் நேற்று அதிகாலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கன்னியம்மாளை அழைத்து கொண்டு புறப்பட்டார். காஞ்சிபுரம் அடுத்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் ஜெயக்குமார் (36), ஆம்புலன்சை ஓட்டினார். மருத்துவ உதவியாளராக உத்திரமேரூர் அடுத்த மலையங்குளத்தை சேர்ந்த தினகரன் (36) உடன் இருந்தார்.