சென்னை: தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, 6, 7, 8ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவப் பாடப்புத்தகங்கள், இலவச நோட்டுகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்குமான இரண்டாம் பகுதி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் சில பள்ளிகளில் இலவச சீருடை, பாடப்புத்தகம் எடுத்து செல்லும் பைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நேற்று மாலை நிருபர்களை சந்தித்துப் பேசினார். அப்ேபாது கீழ் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அது குறித்து ஆலோசித்துதான் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.