ஊரக தூய்மை பராமரிப்பிற்காக தமிழகத்துக்கு அளிக்கபட்ட விருதுடன் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் வேலுமணி

சென்னை: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்தாள் விழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மகாத்மா காந்தி கடந்த 1917ம் ஆண்டு உருவாக்கிய சபர்மதி ஆசிரமத்துக்கு பிரதமர் மோடி நேற்று மாலை சென்றார். அங்கு அவர் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் சமர்பதி ஆற்றங்கரையில் நடந்த தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அதில், இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடம் இல்லா நாடாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இதற்கிடையே, ஊரகப் பகுதிகளின் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றின் முக்கிய அளவீடுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைக்கப்பெற்ற மதிப்புகளின் அடிப்படையில் இந்திய அளவில் சிறந்த மாநிலத்திற்கான விருது மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் சார்பில், தமிழகத்துக்கு அளிக்கப்பட்டது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து விருதை தமிழக நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், சென்னை திரும்பிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரக பகுதி தூய்மை பராமரிப்பில் தமிழகத்துக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட சிறந்த மாநிலத்துக்கான விருதுடன் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Related Stories: