குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் வழித்தடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டை, உடைசலான நிலையில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இவ்வழித்தடத்தில் புதிய பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல்- கரூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் குஜிலியம்பாறை உள்ளது. இவ்வழித்தடத்தில் 10 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல் குஜிலியம்பாறையில் இருந்து வேடசந்தூர், ஆர்.வெள்ளோடு, லந்தக்கோட்டை ஆகிய வழித்தடங்களில் 3 நகர பேருந்துகள் என 13 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவ்வழித்தடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டை, உடைசலான நிலையிலேயே உள்ள அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பஸ்சின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்துள்ளதால் மழை பெய்யும் நாட்களில் இதில் பயணம் செய்யும் பயணிகள் மழையில் நனைந்தவாறே செல்லும் நிலை உள்ளது. மேலும் மேற்கூரை எப்போது விழும் என்ற அச்சத்தில் பயணிகள் பயணம் செய்கின்றனர். பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள் முழுவதும் மிகவும் பழுதடைந்து மூடிய நிலையில் திறக்க முடியாமல் உள்ளது. இதனால் பகல் நேரங்களில் பயணம் செய்யும் பயணிகள் காற்றோட்டம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பஸ்கள் அடிக்கடி ரிப்பேர் ஆகி இடையிலேயே நின்று விடுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.