சென்னை: இடைதரகர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வரும் நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கசான்று பெறும் வசதியை கொண்டு வர பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. புதிதாக வீடு மனை உள்ளிட்ட அசையா சொத்துகளை வாங்குபவர்கள் அந்த சொத்துகளை முந்தைய விவரங்களை தெரிந்து கொள்ள வில்லங்கச் சான்றிதழ் பெறுவது அவசியமானது. இந்த வில்லங்க விபரங்களை பதிவுத்துறை இணைய தளத்தில் இலவசமாக தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. ஆனால் வங்கிகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றிக்கு நேரடியாக விண்ணப்பித்து பெறப்படும் வில்லங்க சான்றிதழ்களே ஏற்கப்பட்டு வந்தது.இந்தநிலையில் ஆன்லைன் பத்திரப்பதிவை போன்று, ஆன்லைனில் வில்லங்கசான்று பெறும் திட்டத்ைத கடந்த ஜனவரி 2ம் தேதி முதல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஆன்லைனில் வில்லங்கசான்று பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது.ஆனால், ஆன்லைனில் பொதுமக்களே நேரடியாக வில்லங்க சான்று பெறுவது என்பது மிகவும் குறைவு தான். அவர்கள் ஆவண எழுத்தரை தான் அணுகி வில்லங்க சான்று பெற விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. எனவே, கட்டணம் தொடர்பான அறிவிப்பு வெளியிடாததை பயன்படுத்தி கொண்டு தங்களது இஷ்டத்திற்கு தகுந்தாற்போல் இடைதரகர்கள் கூடுதலாக பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 1 ஆண்டுக்கு பார்க்க வேண்டுமென்றால் ரூ.141க்கு பதில் ரூ.500ம், 32 ஆண்டுகளுக்கு ரூ.440க்கு பதில் ரூ.2 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது.