சென்னை: கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள் கோயில் இடையிலான மூன்றாவது வழித்தடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார். தெற்கு ரயில்வே பொது மேலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜான் தாமஸ் சென்ட்ரல் அருகே உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2019-20 நிதியாண்டில் ஆகஸ்ட் வரையில் தெற்கு ரயில்வே ஒட்டுமொத்தமாக 8 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இதே காலத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வருவாய் மற்றும் பயணிகள் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள்கோவில் இடையிலான மூன்றாவது வழித்தடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மூன்றாம் வழித்தடத்திற்கு நில ஆர்ஜிதம் செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த வழித்தடம் அடுத்த மார்ச் மாதத்திற்குள் பணி முடிந்து பயணிகள் பயன்பாட்டிற்கு வரும்.