சென்னை: தமிழகத்தில் கள்ளச்சாரய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ‘காந்தியடிகள் காவல் விருது’ அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் உத்தரவுப்படி திருப்பூர் மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.சந்திரமோகன், திருச்சி மண்டல மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் பூங்கோதை, விழுப்புரம் மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் அழகிரி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் பார்த்திபநாதன் ஆகியோருக்கு கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.2020 ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும் இந்த விருதுடன், ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக 40 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.