சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் மழைநீர் வடிகால் கழிவுகள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்லூரி சாலை மற்றும் ஹடோ சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் கடந்த வாரம் பெய்த மழையின் போது குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அடைப்புகளை சீரமைத்த மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை சாக்குப்பைகளில் சேகரித்தனர். எனினும் நான்கு நாட்களுக்கு மேலாகியும் சாக்குப்பைகளில் உள்ள அந்த கழிவுகள் அகற்றப்படாமல் நடைபாதையிலேயே உள்ளன. மகளிர் கிறிஸ்துவ கல்லூரி, நல்லாயன் மேல்நிலைப் பள்ளி மத்திய அரசின் மண்டல எழுத்துப்பொருள் கிடங்கு, தென்மண்டல வானிலை ஆய்வு மையம், சாஸ்திரி பவன், எஸ்.பி.ஐ மண்டல தலைமை அலுவலகம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ள சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் பாதசாரிகள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.