சென்னை: பேனர் விழுந்து பலியான பெண் பொறியாளர் சுபஸ்ரீ வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க எழுதியிருந்த தகுதித்தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். சென்னை குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, பவானி நகரை சேர்ந்த பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ
கடந்த 12ம் தேதி பேனர் விழுந்து லாரி மோதிய விபத்தில் பலியானார். பிடெக் பட்டதாரியான அவர், கனடாவில் எம்.டெக் படிக்க திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த 7 மற்றும் 10ம் தேதி சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலில் ஐஐஎல்டிஎஸ் என்ற தகுதி தேர்வு எழுதியிருந்தார். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே கனடா படிக்க செல்ல முடியும்.
இந்த நிலையில் சுபஸ்ரீ உயிரிழந்ததால் அவர் குடும்பம் சோகத்தில் உள்ளது. அவரின் பெற்றோரை அண்டை வீட்டார், உறவினர்கள் தேற்றி வருகின்றனர். இந்நிலையில் சுபஸ்ரீ வீட்டிற்கு நேற்று கொரியரில் ஒரு தபால் வந்தது. அதை பிரித்து பார்த்தபோது, சுபஸ்ரீ கனடாவில் மேல்படிப்பு படிக்க எழுதியிருந்த ஐஐஎல்டிஎஸ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. சுபஸ்ரீ தகுதி தேர்வில் 77 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்வு பெற்றதால் ஸ்காலர்ஷிப்புடன் மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் மேல்படிப்புக்கு வெளிநாடு செல்ல, தங்கள் மகள் இல்லையே என்று சுபஸ்ரீயின் பெற்றோர் கண் கலங்கினர். இது அப்பகுதி மக்களை மேலும் சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது.