சென்னை: கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் செயற்பொறியாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் வாரம்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அப்போது அந்த மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொள்வார்கள். அதே போல துறை அதிகாரிகளும் பங்கேற்பார்கள். அவ்வாறு பங்கேற்றவுடன், தங்களது பகுதியில் விவசாயம் செய்வதில் உள்ள பிரச்னைகள் பற்றி கூறுவார்கள். குறிப்பாக தண்ணீர் தட்டுப்பாடு, விதை நெல் பிரச்னை, நெற்பயிர்களை தாக்கும் நோய்கள், மின்தடை உள்ளிட்ட பிரச்னைகளை பற்றி கூறுவார்கள்.
அப்போது சம்மந்தப்பட்டத்துறையை சேர்ந்த அதிகாரிகள், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வருங்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டரிடத்தில் தெரிவிப்பார்கள். இந்த நடைமுறை தொடர்ந்து நடந்து வருகிறது.