சென்னை: சென்னை ஐஐடியில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழா ஜூலை 19ம் தேதி நடைபெற இருந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் வர முடியாத சூழலால் பட்டமளிப்பு விழா தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஐஐடி பட்டமளிப்பு விழா செப்டம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளதாக ஐஐடி நிர்வாகம் அறிவித்தது. அதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேச உள்ளார். இதுதொடர்பாக ஐஐடி நிர்வாகம் இணையதளத்தில் பட்டமளிப்பு விழா தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.