சென்னை: காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 644 காவலர்களுக்கு முதல்வர் விருதை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்.தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதல்வர் காவல் பதக்கங்கள் அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2019ம் ஆண்டுக்கான தமிழக முதல்வர் காவல் பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையுமின்றி சிறப்பாக பணிபுரிந்த சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 230 போலீசார், போக்குவரத்து காவலில் பணிபுரியும் 289 போலீசார், ஆயுதப்படையில் பணிபுரியும் 27 போலீசார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு, குற்ற ஆவண காப்பகம், நவீன கட்டுப்பாட்டறை, சென்னை பாதுகாப்பு காவல் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் 98 போலீசார் என மொத்தம் 644 ஆண் மற்றும் பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.