சென்னை: தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் பார் டெண்டர் நடக்கிறது. இந்த டெண்டரின் மூலம் பார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து 1,872 மதுக்கூடங்கள் என்கிற பார்கள் செயல்படுகிறது. கடந்த ஆண்டு பார் டெண்டர் தொகை அதிகமாக இருந்ததால் ஏலம் எடுக்க பெரும்பாலோனோர் முனைப்பு காட்டவில்லை. இதனால் பார் உரிமை தொகை குறைக்கப்பட்டது. இதையடுத்து, பார் டெண்டரில் அனைவரும் டெண்டரில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என பார் உரிமையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 11ம் தேதி டெண்டர் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென பார் டெண்டரை நிர்வாகம் ஒத்திவைத்தது. பின்னர், இம்மாதம் 30ம் தேதிக்குள் டெண்டரை நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை திட்டமிட்டபடி பார் டெண்டர் நடைபெறுகிறது.