சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வில் இந்திய ெமாழி தேர்வு இன்று நடக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 896 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 2ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். இதில், இந்தியா முழுவதும் 11,845 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 610 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மெயின் தேர்வு கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று கட்டுரை வடிவிலான தேர்வு நடந்தது. தொடர்ந்து, 21ம் தேதி காலை இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வும், 22ம் தேதி காலையில் 4ம் தாள் (பொது அறிவு 3), மதியம் 5ம் தாள் தேர்வு (பொது அறிவு4) நடந்தது.