பெங்களூரு: முன்னாள் முதல்வர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் செல்போன் அழைப்பை ஒட்டு கேட்ட விவகாரம் தொடர்பாக பெங்களூரு மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனரும், தற்போதைய ஏடிஜிபி.யுமான அலோக் குமாரின் வீட்டில் 5 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பென்டிரைவ், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதல் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற நாள் வரைக்கும் சில அரசியல் பிரமுகர்கள், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் செல்போன் அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கு காரணமாக அப்போதைய மாநகர போலீஸ் கமிஷனர் அலோக் குமார் இருந்துள்ளார். குமாரசாமியின் ஆட்சியில் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அலோக் குமார் தற்போது கே.எஸ்.ஆர்.பி.யின் ஏடிஜிபி.யாக உள்ளார். அவரின் உத்தரவின் பேரில் செல்போன் அழைப்புகளை ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.முன்னாள் முதல்வர் சித்தராமையா, அவரது உதவியாளர்கள், தற்போதைய முதல்வர் எடியூரப்பா, அவரது உதவியாளர், அதிருப்தி எம்எல்ஏ.க்கள், அல்சூர்கேட் டி.சி.பி, மத்திய மண்டல டி.சி.பி அலுவலக போலீசார், புதிய போலீ்ஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உள்பட 40 பேரை குறிவைத்து இந்த ஓட்டுகேட்பு நடத்தப்பட்டுள்ளது.