சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன், அவரது நன்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை டெல்லி குற்றவியல் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து வழக்கின் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகரை தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் டிடிவி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, பி.குமார் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட அனைவரும் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு தங்களது குற்றப்பதிவின் நகலை பெற்றுக்கொண்டனர்.டிடிவி.தினகரன் பாட்டியாலா நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில்,”சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். இதில் விசாரணைக்கான எந்தவித முகாந்திரமும் கிடையாது. அதனால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது.