சென்னை: சென்னை பாரிமுனை, பூக்கடை, மண்ணடி, சவுகார்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இவற்றை பிடிப்பதில் போலீசார் மெத்தனமாக உள்ளனர். சென்னை பூக்கடை காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளான பாரிமுனை, மண்ணடி, பிராட்வே, கொத்தவால் சாவடி, சவுகார்பேட்டை, யானைகவுனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக தங்கம், வெள்ளி பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை, வெளிநாட்டு பொருட்கள் விற்பனையும் அமோகமாக நடக்கிறது.இதனால் பூக்கடை, பாரிமுனை, சென்ட்ரல் ஆகிய பகுதிகளில் இருக்கும் தனியார் விடுதிகளில் வெளிமாநிலங்களில் தங்கம், வெள்ளி வாங்க வருபவர்கள் தங்குகின்றனர். அவர்களை ஒரு ரகசிய இடத்தில் வரவழைத்து, ஒரு ரகசிய குறியீட்டுடன் தங்கம், வெள்ளி விற்பனை மொத்தமாக நடந்து வருகிறது. இதற்கு உரிய பில்களும் வழங்கப்படுவதில்லை. இதனால் வருமானவரி துறையினருக்கு நீண்ட காலமாக பலகோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.