மிக உயரிய பாரத ரத்னா விருதுக்கு இணையான 'சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது': மத்திய அரசு அறிமுகம்

புதுடெல்லி: சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது என்ற புதிய விருதை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சர்தார் வல்லப்பாய் படேல்.  இவர் இந்தியா சுதந்திரம் அடைந்த போது பல சமஸ்தானங்களாக பிரிந்திருந்த நாட்டை ஒன்றிணைத்து ஒரே இந்தியாவாக மாற்றியவர்.  இவர் இரும்பு மனிதர் என போற்றப்படுபவர் ஆவார். இவருக்கு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உலகிலேயே உயரமான சிலை ஒன்று கடந்த 2018 அக்டோபர் மாதம் 31ம் தேதி அமைக்கப்பட்டது. ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ள அந்த சிலைக்கு மிக அருகே கடந்த டிசம்பர் மாதத்தில் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் படேல் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தேசிய ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டவர் சர்தார் வல்லப்பாய் படேல். இனி அவர் பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படும். இனி வருடா வருடம் பத்ம விருதுகளைப் போல படேலை போற்றும் விதத்தில் தேசிய ஒற்றுமை விருது ஒன்றும் மத்திய அரசு வழங்க உள்ளது, என அறிவித்தார். இந்த நிலையில், சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது என்ற புதிய விருதை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மிக உயரிய விருதான பத்ம விருதுகளுக்கு நிகராக சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது கருதப்படும்.

இந்திய குடிமகனான எந்த ஒரு தனிநபருக்கும் சாதி மத பேதமின்றி இந்த விருது வழங்கப்படலாம். அல்லது, எந்த ஒரு நிறுவனத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கான பங்களிப்புக்காக வழங்கப்படலாம். விருது பெற்றவர்களின் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்படும், என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்விருதை பெறுவோருக்கு பதக்கமும், அதற்கான சான்றிதழயைும் ஜனாதிபதி அவர்கள் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதக்கத்தின் புகைப்படங்களை உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. தேச ஒற்றுமையை நிலைநாட்ட படேல் காட்டிய உறுதிப்பாட்டை நினைவுகூரும் வகையில் மத்திய அரசு இந்த விருதை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: