சென்னை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எழும்பூர் பாந்தியன் சாலையில் அரசு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகளின் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருந்தாளுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் டாக்டர்கள், செவிலியர்களின் செல்போன், பணம் மற்றும் உடமைகள் அடிக்கடி திருடு போகிறது.பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அந்த வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லாததால் மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தொடர்ந்து புகார்கள் வந்ததால், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, வயதான முதியவர் ஒருவர், மருத்துவமனை வந்து ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் தங்கியிருக்கும் அறையில் இருந்து பணம், செல்போன் மற்றும் உடமைகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறுவது போன்ற காட்சி பதிவாகியிருந்தது.