சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சியானது இன்னும் 3 நாளில் தமிழகத்தை நோக்கி நகரும் என தெரிவித்தார். இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார். குறிப்பாக வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.