மதுரை,: மதுரை மருத்துவக்கல்லூரியில் பயிலும் 40 பேருக்கான அடையாளச் சோதனை இன்று நடக்கிறது. இதற்காக விடுமுறை எடுத்திருப்பவர்கள், சுற்றுலா சென்றவர்களையும் அவசரமாக கல்லூரிக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் உள்ளிட்ட சிலரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருவதோடு, துறைரீதியாக விசாரணையும் நடக்கிறது.தலைமறைவான உதித்சூர்யாவை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆள் மாறாட்டம் மூலம் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்ந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து, அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும், ஏற்கனவே நிறைவுபெற்ற, மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்து, அனைவரின் சான்றிதழ்களையும் மீண்டும் சரிபார்க்கும்படி சுகாதாரத்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.