அதிக கட்டணம் வசூல் செய்த சினிமா தியேட்டருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூல் செய்த திரையரங்கிற்கு ₹15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செம்பியம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜன். இவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் படம் பார்பதற்காக, கடந்த 11.7.2018 அன்று ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துள்ளார். அப்போது, டிக்கெட் விலை ரூ.150 மற்றும் ஆன்லைன் கட்டணம் ₹35.40 என மொத்தம் ₹185.40 வசூல் செய்துள்ளனர். ஆனால், அரசு உத்தரவின்படி கோயம்பேட்டில் உள்ள அந்த திரையரங்கத்திற்கு குறைந்தபட்சம் கட்டணம் ₹40 அதிகபட்ச கட்டணம் ₹100 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், திரையரங்க நிர்வாகமோ அதனை பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்தாக கூறி, தேவராஜன் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி லக்‌ஷ்மிகாந்தம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திரையரங்க நிர்வாகம் அரசு உத்தரவை பின்பற்றி டிக்கெட் கட்டணமும், வாகன பார்கிங் கட்டணம் வசூலிப்பதில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு பிறப்பித்த உத்தரவு நகலும் நீதிபதி முன்பு சமர்பிக்கப்பட்டது. இதனை பார்த்த நீதிபதி, திரையரங்க நிர்வாகம் பாதிக்கப்பட்ட தேவராஜனுக்கு இழப்பீடாக ₹10 ஆயிரமும், மன உளைச்சலுக்கு ₹5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

Related Stories: