சென்னை: மோடி - சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். உலக அளவில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்ற மாமல்லபுரத்துக்கு வருகிற அக்டோபர் 11ம் தேதி பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் 3 நாள் பயணமாக வருகின்றனர்.அவர்கள் மாமல்லபுரத்திலுள்ள அழகிய சிறப்பு வாய்ந்த புராதான சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் ஆகியவைகளை பார்வையிட்டு மேலும் இந்தியா- சீனா இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், வடக்கு மண்டல ஐ.ஜி.தேன்மொழி உள்ளிட்ட அதிகாரிகள் மாமல்லபுரத்திலுள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு மற்றும் இதர வசதிகள் குறித்து அதிகாரிகளிடத்தில் கேட்டறிந்தனர். அவர்களுடன் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, காஞ்சிபுரம் எஸ்.பி.கண்ணன், மாமல்லபுரம் ஏஎஸ்பி பத்ரிநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர்.