வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் கனிமங்களின் மாதிரிகளை சேகரித்து பட்டியலிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கனிம வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் 160 கல்குவாரிகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் 60 குவாரிகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது. மற்ற குவாரிகள் பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கிறது. செயல்பாட்டில் உள்ள கல்குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா? என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குவாரிகளில் இருந்து எவ்வளவு கற்கள் வெட்டி எடுத்து செல்லப்படுகிறது என்பதை ஆவணங்களில் முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் அனுமதி பெறப்பட்ட வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்களை குவாரிகளில் பயன்படுத்தக்கூடாது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் புதிதாக 40 கல்குவாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த குவாரிகள் டெண்டர் விடுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.