திண்டுக்கல்: பழனியில் சித்தநாதன் பஞ்சாமிர்த நிறுவனர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நிறுவனர் அசோக்குமார் வீட்டில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முக்கிய பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். சுவை மிகுந்த இந்த பஞ்சாமிர்தம் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. பழனி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் ஆண்டுக்கு பல கோடி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பழனி மலை அடிவாரத்தில் உள்ள சித்தநாதன் மற்றும் கந்தவிலாஸ் ஆகிய இரு பஞ்சாமிர்தக் கடைகளின் உரிமையாளர்கள் முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.