ஒரே நாடு, ஒரே மொழி என்னும் முழக்கத்தை தேசிய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளும் முறியடிக்க முன்வரவேண்டும் : திருமாவளவன் பேட்டி

சென்னை: ‘‘ஒரே  நாடு, ஒரே மொழி என்னும் முழக்கத்தை தேசிய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளும்  முறியடிக்க முன் வரவேண்டும்” என்று திருமாவளவன் கூறியுள்ளார். பெரியாரின் 141வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி, செல்லத்துரை, இரா.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

விடுதலைப்போராட்டத்தில் இந்தி பேசுகிறவர்கள் மட்டுமின்றி இந்தி அல்லாத பிறமொழி பேசுகிறவர்களும் தியாகம் செய்துள்ளனர். அதாவது, தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்கம், குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை பேசிய தேசிய இனங்களும் வெள்ளையர்களை எதிர்த்து போராடியுள்ளன. இதை அமித்ஷா கும்பல் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் இருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரே நாடு, ஒரே மொழி என்னும் முழக்கம் இந்தியாவை பல கூறுகளாக துண்டாக்கும் ஆபத்தான முயற்சியாகும். எனவே தேசிய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளும் இதனை முறியடிக்க முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: