சென்னை: நன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியாரின் 102-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி கூறியுள்ளதாகவும், தமிழ் மீது உண்மையிலேயே பற்று கொண்டவர்கள் இதை கொண்டாடி இருக்க வேண்டாமா எனவும் வினவினார். சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பேசியதை தமிழர்கள் கொண்டாடவில்லை, பிற மொழி பேசும் மாநிலத்தில் இருப்பவர்கள் நூறு தமிழ் வார்த்தை கற்க வேண்டும் என கூறியவர் பிரதமர் என்றும் அதை கொண்டாடத் தெரியாதவன் தமிழன், நன்றி மறந்தவன் தமிழன் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.