அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடை, வீடு வாடகை 15% உயருகிறது: உயரதிகாரி தகவல்

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் கட்டிடம் மற்றும் நிலங்களுக்கு வாடகை 15 சதவீதம் உயருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயை பெருக்கும் வகையில் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த வாடகையை கடந்த 2016 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து  வாடகை உயர்வு தொடர்பாக வாடகைதாரர்களுக்கு நோட்டீஸ் மூலம் அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக ஓராண்டுக்கு பிறகு தான் அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் தந்தது. இந்த உயர்த்தப்பட்ட வாடகை பாக்கி லட்சக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், வாடகை பணத்தை தர வாடகைதாரர்கள் மறுத்து விட்டனர். இந்த நிலையில் வாடகை உயர்வு, பாக்கி தொடர்பாக வாடகைதாரர்கள் இணை ஆணையர் நீதிமன்றம், ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்த்த வேண்டும். அதனடிப்படையில் 2016ல் வாடகை உயர்த்தப்பட்ட நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்பந்தப்படி இந்தாண்டு 15 சதவீதம் வாடகை உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக கமிஷனரின் ஒப்புதலுக்காக அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் கட்டிடங்களின் அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் வாடகை உயர்வு அமலுக்கு வருகிறது.

Related Stories: