சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் கட்டிடம் மற்றும் நிலங்களுக்கு வாடகை 15 சதவீதம் உயருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயை பெருக்கும் வகையில் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த வாடகையை கடந்த 2016 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து வாடகை உயர்வு தொடர்பாக வாடகைதாரர்களுக்கு நோட்டீஸ் மூலம் அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக ஓராண்டுக்கு பிறகு தான் அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் தந்தது. இந்த உயர்த்தப்பட்ட வாடகை பாக்கி லட்சக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.