புதுடெல்லி: பண்டிகை சீசனில் தள்ளுபடிகளை அள்ளி வழங்கியும் கார், டூவீலர்கள் விற்பனை மந்த நிலையிலேயே நீடிப்பதாக, வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் ஆட்டோமொபைல் துறை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், கடந்த 10 மாதங்களாக வாகன விற்பனை சரிந்து வருகிறது. இதனால், 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். பண்டிகை சீசன் துவங்கியும் விற்பனை மந்தமாகவே உள்ளது. இதுகுறித்து டீலர்கள் சிலர் கூறியதாவது:கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வாகன விற்பனை 21 ஆண்டுகளில் இல்லாத கடும் சரிவை சந்தித்தது. இருப்பினும், பண்டிகை தொடங்கியதால் விற்பனை உயரும் என்ற நம்பிக்கை இருந்தது.