சென்னை: கணக்குகளை தாக்கல் செய்யாத சங்கங்களை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் 2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி உரிய நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பத்திரபதிவுத்துறை மூலம் சொத்து, திருமண பதிவு மட்டுமின்றி, சீட்டு, சங்கங்கள் பதிவு செய்யப்படுகிறது. தற்போது வரை 1.97 லட்சம் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். ஒவ்வொரு சங்கமும் நிதியாண்டு முடிவடைந்த 6 மாதங்களுக்குள் பொதுக்குழுவில் தாக்கல் செய்த கணக்கு விவரங்களை மாவட்டபதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், தற்போது வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் பல ஆண்டுகளாக கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட பதிவாளர்கள் தலைமையில் செயல்படும் சீட்டு, சங்கம் பிரிவினர் நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை. இதனால், சங்கங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பதிவுத்துறைக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக, சங்கங்கள் தங்களது கணக்குகளை தாக்கல் செய்யாத நிலையில், ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய சங்க கட்டணம் மற்றும் அபராத தொகையை சேர்த்தால் 2 ஆயிரம் கோடி வரை பதிவுத்துறைக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிய வந்துள்ளது.