சென்னை: பொதுப்பணித்துறையில் இல்லாத பணியிடத்திற்கு செயற்பொறியாளர் பதவி உயர்வின் பேரில் கண்காணிப்பு பொறியாளர் நியமனம் செய்யப்பட்டு இருப்பது அந்த துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுப்பணித்துறையில் காலியாக பணியிடங்கள் உள்ள இடத்தில் தான் அந்தந்த நிலையான பொறியாளர்கள் மாற்றப்படுவது வழக்கம் ஆனால், கடந்த சில நாட்களுக்கு பணியிடம் இல்லாத ஒரு இடத்தில் செயற்பொறியாளர் ஒருவர் பதவி உயர்வின் பேரில் கண்காணிப்பு பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார். குறிப்பாக, சமீபத்தில் செயற்பொறியாளர் 19 பேர் கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதில், நாகர்கோயில் கடல் தடுப்பு பிரிவு கோட்ட செயற்பொறியாளர் ஒருவருக்கு ஸ்வர்மா திட்ட கண்காணிப்பு பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார். ஸ்வர்மா எனப்படும் மாநில நீர்வள ஆதார மேலாண்மை முகமையில் தலைமை பொறியாளர் தலைமையில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் என 10 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், கண்காணிப்பு பொறியாளர் பணியிடம் என்று ஒன்றே தற்போது வரை உருவாக்கப்படவில்லை. ஆனால், புதிதாக பணியிடங்கள் உருவாக்கப்பட்டது போன்று தமிழக அரசையே ஏமாற்றி அந்த பணியிடத்திற்கு அந்த கண்காணிப்பு பொறியாளர் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனால், தற்போது வரை அவரால் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.