வாலாஜா : நாடு முழுவதும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடவடிக்கைகள் வேகமெடுத்து வருவதால் ஏடிஎம் பயன்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கின்றனர் வங்கியாளர்கள். மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நமது அண்டை நாடான சீனாவில் 80 சதவீத மக்கள் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தணை செய்கிறார்கள். அதற்காக அங்கே இரண்டு ஆப்ஸ்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் இதற்காக 80 ஆப்ஸ்கள் உள்ளது. ஆனால், நமது நாட்டில் 20 சதவீதம் மக்கள் மட்டும் டிஜிட்டல் முறையை பயன்படுத்துகிறார்கள். இதனை மாற்றுவதற்காக மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி டிஜிட்டல் அபியான்(திஷா) திட்டத்தின் கீழ் மிகபெரிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக கடந்த செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை 10 லட்சம் மாணவர்களையும் மற்றும் பொதுமக்களையும் இதில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசின் பொது சேவை மையத்தின் மூலமாக டிஜிட்டல் முறையில் வங்கி பரிவர்த்தனை ஆர்டிஜிஎஸ் நெப்ட் மற்றும் ரொக்கமில்லா பணத்தை எப்படி கையாள்வது என்பது குறித்து தொடர் வகுப்புகள் நடத்தி வருகிறது. அவர்களுக்கு குறைந்தபட்சம் 20 மணி நேரம் இந்த வகுப்புகள் நடத்தி ஆன்லைன் மூலமாக தேர்வுகள் வைக்கப்படுகிறது, தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.