பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது தண்ணீர் லாரி கவிழ்ந்து மாணவன் பரிதாப பலி

திருவொற்றியூர்: மணலி பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். கூலி தொழிலாளி. இவரது மகன் ஷியாம் (13), பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்ததும்  ஷியாம் வீட்டிற்கு புறப்பட்டான். மணலி சாலையிலிருந்து பெரியார் நகருக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.  இங்கு செல்ல பஸ் வசதி இல்லாததால், ஷியாம் பெரியார் நகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக வந்த  ஒரு குடிநீர் லாரியை நிறுத்தி, அதில் ஏரி  அமர்ந்து  சென்றான். குடிநீர் லாரி சிறிது தூரம் சென்ற போது, எதிரில் ஒரு டிரைலர் லாரி வந்துள்ளது. இதற்காக குடிநீர் லாரியை டிரைவர் குபேந்திரன் (45), சாலை ஓரமாக ஓட்டியபோது, எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் லாரி  கவிழ்ந்தது.

இதில், லாரி டிரைவர் குபேந்திரன், ஷியாம் ஆகிய இருவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர். சற்று நேரத்தில் குபேந்திரன் மட்டும் லாரியின் முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உடல் முழுதும் பலத்த காயங்களுடன் வெளியே வந்தார். ஷியாம் லாரிக்கு அடியில் சிக்கினான். உடனே பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். மணலில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. உடனே ராட்சத கிரேன்  கொண்டுவரப்பட்டு லாரியை தூக்கியபோது, சிறுவன் இறந்தது தெரிந்தது.இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷியாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: