சென்னை: ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பொது விநியோக திட்டத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்று அமைச்சர் காமராஜ் கூறினார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் சென்னை, எழிலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும், அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் குறித்து யாரும் பேசவில்லை. இருந்தபோதும், பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதால் எனது விளக்கமான பதிலை கூட்டத்தில் பதிவு செய்துள்ளேன்.