திருப்பூர் தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு : 2 பேருக்கு போலீசார் வலை

திருப்பூர்:  திருப்பூரில் தியேட்டர் வளாகத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் குண்டு வீசி சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் மண்ணரை பகுதியில் சினிமா தியேட்டர் உள்ளது. இதன் உரிமையாளர் ஈஸ்வரமூர்த்தி. இந்த தியேட்டரில் நேற்று முன்தினம் இரவு காட்சி 12.30 மணிக்கு முடிந்த பின் ஊழியர்கள் வளாகத்தை பூட்டினர். பின்னர் நேற்று காலை தியேட்டருக்கு வந்த ஊழியர்கள், வளாகத்தில் பாட்டில் சுக்கு நூறாக உடைந்து கிடந்ததையும், அங்கு தீ எரிந்து கரி படிந்திருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். தியேட்டர் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது, நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் 2 பேர் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டை வீசியதும், அவர்கள் பெட்ரோல் குண்டை வீசும்போது, 2 பேர் மீதும் லேசாக தீப்பற்றியதும், அதை அவர்கள் அணைத்துவிட்டு பைக்கில் தப்பி சென்றதும் தெரிந்தது. இரவு காட்சி முடிந்த பின் இச்சம்பவம் நடந்துள்ளதால், அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்டாலும், நேற்று தியேட்டரில் காட்சிகள் வழக்கம்போல் நடந்தன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘நேற்று முன்தினம் இரவு காட்சிக்கு 2 பேர் குடிபோதையில் வந்ததால், அவர்களுக்கு டிக்கெட் கொடுக்க தியேட்டர் நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் சென்ற அவர்கள் நள்ளிரவில் வந்து பெட்ரோல் குண்டு வீசியிருக்கலாம் என கருதுகிறோம், அவர்களை தேடி வருகிறோம்’’ என்றனர்.

Related Stories: