ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகள், சக ஊழியர்களின் டார்ச்சரால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம், காட்டூரணியை சேர்ந்தவர் நம்புராஜன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவரது மனைவி ஷோபனா (41). மகள் அபிநயாஸ்ரீ (9). ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகர் கிளையில், ஷோபனா இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு நம்புராஜன் சென்னை புறப்பட்டு சென்றார். வீட்டில் ஷோபனாவும், மகளும் இருந்தனர்.நேற்று காலை குழந்தை அபிநயா எழுந்து பார்த்தபோது, தாயை காணாமல் திகைத்தார். இதுகுறித்து உறவினர் ராமநாதனுக்கு (அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்) செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் வந்து அப்பகுதி முழுவதும் தேடியபோதும் ஷோபனாவை காணவில்லை. அவரது அறையில் பார்த்தபோது, ஷோபனா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடந்தது. அதில், உடன் பணிபுரியும் 3 ஊழியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களது டார்ச்சர் காரணமாக வீட்டின் அருகே ஊரணியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என ஷோபனா எழுதியிருந்தது தெரியவந்தது.