கிண்டி வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 13ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்: வேலைவாய்ப்பு ஆணையர் அறிவிப்பு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வருகிற 13ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளி கிழமையானது வேலைவாய்ப்பு வெள்ளி ஆக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வருகிற 13ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. முகாமில் 35 வயதிற்கு உட்பட்ட 8ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம். முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட பணிகாலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறை நிறுவனங்கள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: