*விவசாயிகள் வலியுறுத்தல்
மேலும் நமக்குநாமே திட்டம், நூறு நாள் வேலை திட்டம் உள்ளிட்ட கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்மாய் மதகுகளிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு மேல் தேவைப்படும் அளவில் விவசாய நிலங்களிலுள்ள வரத்து கால்வாய்களில் சிமென்டிலான கால்வாய் கட்டுமானங்கள் கட்டப்பட்டது. இப்பகுதியில் ஏற்பட்ட தொடர் வறட்சியின் காரணமாக சுமார் 9 வருடங்களுக்கு மேலாக நீர் வரத்தின்றி, கால்வாய் கட்டுமானங்களில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தும், கட்டுமானங்கள் சேதமடைந்தும் கிடக்கிறது.
இதனால் மழை பெய்யும் காலங்களில் கண்மாய் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கினாலும் கூட, அந்த தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறுகின்றனர். வரத்து கால்வாய் சேதமடைந்து கிடப்பதால் தண்ணீர் செல்ல வசதியின்றி, கூடுதல் பணம் செலவழித்து பம்புசெட் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சும் நிலைமை உள்ளது. இந்நிலையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதி குடிமராமத்து பணிகளுக்கு ரூ.13.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 28 பொதுப்பணித் துறை கண்மாய்கள் புனரமைப்பு மற்றும் மதகுகள் புதுப்பித்தல், தேவையான இடங்களில் புதியதாக மதகு அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. இதுபோன்று ஊராட்சி ஒன்றியங்களின் சார்பில் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.1 கோடியே 20 லட்சத்திற்கு மேலான ரூபாய் மதிப்பீட்டில் 120க்கும் மேற்பட்ட கண்மாய், ஊரணிகளை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.ஆனால் இந்த ஊராட்சி அளவிலான குடிமராமத்து திட்டத்தில் பழைய தத்துகள், மதகுகள், வரத்து கால்வாய் கட்டுமானங்களை மராமத்து செய்யவோ அல்லது புதிதாக கட்டும் பணி நடக்கவில்லை. எனவே கிராமங்களில் பாசனத்திற்கு பயன்படும் தத்துகள், மதகுகள், சிமென்டிலான வரத்து கால்வாய்களை சீரமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.