சென்னை: பொதுப்பணித்துறையில் 100 செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் பல முக்கிய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 18 செயற்பொறியாளர்கள் விடுப்பில் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவில் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், ஓய்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 700 உதவி பொறியாளர், 250 உதவி செயற்பொறியாளர், 100 செயற்பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில், செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான பொறியாளர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால், அந்த பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், தற்போது வரை பதவி உயர்வு பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 100 செயற்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, ஒரு செயற்பொறியாளர் 3 முதல் 4 பணியிடங்களை கூடுதலாக கவனித்து வருகின்றனர். இருப்பினும் அவர்களால் முழுமையாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை.