பல்லாவரம்: பல்லாவரம் அருகே பைனான்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 115 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹30 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்னர். பல்லாவரம் அடுத்த பம்மல், தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் இமானுவேல் ஜெயசீலன் (41). தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில துணை தலைவர். இவர், பம்மல் பிரதான சாலையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். மாதாந்திர ஏல சீட்டும் நடத்தி வருகிறார். பைனான்ஸ் நிறுவனம் நடத்துவதால் இவர் தன்னிடம் எப்போதும் பணத்தை ரொக்கமாக வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைதோறும் இமானுவேல் ஜெயசீலன் தனது குடும்பத்தினருடன் பம்மல் பகுதியில் உள்ள சர்ச்சுக்கு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை 9 மணியளவில் இவர், தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் சர்ச்சுக்கு சென்றார். அங்கிருந்து, 11 மணிக்கு வீட்டிற்கு திரும்பியபோது, அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இமானுவேல் ஜெயசீலன் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, ரகசிய அறையில் வைத்திருந்த 115 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹30 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.