சென்னை: தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை இன்று பதவியேற்கவுள்ளார். இதற்காக கவர்னர் மாளிகையில் பிரம்மாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜகவின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இருந்து வந்தார். அவரின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் கடந்த 1ம் தேதி வெளியிட்டார். கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் தமிழிசை விடுவிக்கப்பட்டார்.
தமிழிசை கவர்னராக நியமிக்கப்பட்டதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள தெலங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்தகிரியிடம் தமிழிசை சவுந்திரராஜன் நியமன ஆணையை பெற்று கொண்டனர்.