சென்னை: கேந்திரிய வித்யாலயா பாடப்புத்தகத்தில் தலித் குறித்து இடம்பெற்ற பாடப்பகுதி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட மத்திய அரசின் புத்தகத்தில் சாதிய ரீதியான, குறிப்பிட்ட பிரிவினரை அவமதிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றுள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தலித், முஸ்லிம் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அந்த பாடப்பகுதியில் தலித் மக்கள் குறித்தும், முஸ்லிம் மக்கள் குறித்த தகவல்களை விவரித்து எழுதியுள்ள பாட ஆசிரியர் அந்த பாடத்தின் பின்பகுதியில், தலித், முஸ்லிம் குறித்தும் கேள்விப்பகுதியில் சில கேள்விகளை கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி கேள்வித்தாளில், தலித் என்றால் யார் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கு கொள்குறி விடையாக நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. * வெளிநாட்டவர், * தீண்டத்தகாதவர், * நடுத்தர வர்க்கத்தினர், * உயர் வகுப்பினர் என்று நான்கு தெரிவு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு சரியான பதிலாக ‘தீண்டத்தகாதவர்’ என்ற பதிலை மாணவர்கள் தெரிவு செய்ய வேண்டும்.