சிபிஎஸ்இ புத்தகத்தில் மீண்டும் சர்ச்சைக்குரிய பாடங்கள் சேர்ப்பு : கல்வியாளர்கள் கண்டனம்

சென்னை: கேந்திரிய வித்யாலயா பாடப்புத்தகத்தில் தலித் குறித்து இடம்பெற்ற பாடப்பகுதி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட மத்திய அரசின் புத்தகத்தில் சாதிய ரீதியான, குறிப்பிட்ட பிரிவினரை அவமதிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றுள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தலித், முஸ்லிம் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அந்த பாடப்பகுதியில் தலித் மக்கள் குறித்தும், முஸ்லிம் மக்கள் குறித்த தகவல்களை விவரித்து எழுதியுள்ள பாட ஆசிரியர் அந்த பாடத்தின் பின்பகுதியில், தலித், முஸ்லிம் குறித்தும் கேள்விப்பகுதியில் சில கேள்விகளை கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி கேள்வித்தாளில், தலித் என்றால் யார் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கு கொள்குறி விடையாக நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. * வெளிநாட்டவர், * தீண்டத்தகாதவர், * நடுத்தர வர்க்கத்தினர், * உயர் வகுப்பினர் என்று நான்கு தெரிவு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு சரியான பதிலாக ‘தீண்டத்தகாதவர்’ என்ற பதிலை மாணவர்கள் தெரிவு செய்ய வேண்டும்.

அதேபோல முஸ்லிம்களின் பொதுவான வேறுபாடுகள் பற்றி  குறிப்பிடுக என்று கேள்வி எழுப்பி அதற்கு கொள்குறி விடையாக * முஸ்லிம்கள் தங்கள் இனப் பெண்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை, * அவர்கள் வெஜிடேரியன், * ரோசா நேரத்தில் அவர்கள் உறங்குவதில்லை, * இவர்கள் எல்லாம்,  என விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முஸ்லிம்கள் தங்கள் இனப்பெண்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்ற பதிலை தெரிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பாடப்பகுதிகள், கேள்விகளுக்கு கல்வியாளர்கள் பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து அந்த பாடப்பகுதியை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: